சென்னை - திருச்சி தடத்தில் ரயில் வேகத்தை அதிகரிக்க நடவடிக்கை
சென்னை - விழுப்புரம் - திருச்சி வழித்தடத்தில் மணிக்கு 130 வேகத்தில் ரயில்களை இயக்கும் வகையில், வளைவு நீக்கும் பணி உள்பட பல்வேறு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.;
தமிழகத்தில் முக்கிய வழித்தடங்களில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரயில்வே தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதாவது, தண்டவாளம், சிக்னல் முறைகளை மேம்படுத்துவது, பாலம் அமைப்பது, வேகக் கட்டுபாடுகளை அகற்றுவது, வளைவுகளை நீக்குவது உள்பட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் முடிந்த வழித்தடங்களில் ரயில் வேகத்தை அதிகரித்து, இயக்க அனுமதிக்கப்படுகிறது. அந்த வகையில், சென்னை - ரேணிகுண்டா, அரக்கோணம் - ஜோலார்பேட்டை, சென்னை - கூடூர் ஆகிய வழித்தடங்களில் அதிவிரைவு ரயில்கள் மணிக்கு 110 கி.மீ. முதல் 130 கி.மீ. வரை வேகத்தில் இயக்கப்படுகின்றன. ஆனால், சென்னை - விழுப்புரம் - திருச்சி வழித்தடத்தில் தற்போது, மணிக்கு 80 முதல் 110 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதிகமான வளைவுகள் இருப்பதாலும், பழைய பாலங்கள் மேம்படுத்தப்படாமல் இருப்பதாலும் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. இந்நிலையில், இத்தடத்தில் வளைவுகளை நீக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: முக்கிய பாதைகளில் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் வகையில், மேம்பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. வளைவுகளை நீக்குவது, பழைய பாலங்களை மேம்படுத்துவது, பழைய ரயில் பாதைகளை புதுப்பிப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுதவிர, தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரயில் பாதைகளும் படிப்படியாக மேம்படுத்தப்படுகிறது. செங்கல்பட்டு – சென்னை எழும்பூர் தடத்தில் மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள் இயக்கப்படுகிறது. ஆனால், திருச்சி – விழுப்புரம் தடத்தில் மணிக்கு அதிகபட்சமாக 90 - 100 கி.மீ. வேகத்தில் செல்கின்றன. எனவே, இந்த தடத்தில் ரயில்கள் மணிக்கு 130 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில், தேவையற்ற வளைவுகளை நீக்குவது, பழைய பாலங்களை மேம்படுத்துவது அல்லது புதுப்பிப்பது, சிக்னல் தொழில்நுட்பத்துடன் ரயில் பாதைகளை புதுப்பிப்பது உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் இந்த பணிகளும் முடித்து, தென்மாவட்ட ரயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். இதனால், பயண நேரம் 30 முதல் 40 நிமிடங்கள வரை குறையும் என அவர்கள் கூறினர்.