இளையான்குடி அருகே பால்குட திருவிழா
இளையான்குடி அருகே பால்குட திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்;
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள தென்னஅழகாபுரி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் 9-ம் ஆண்டு பால்குடம் மற்றும் இளநீர் காவடி அலகு குத்தும் பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கிய திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து பக்தி பரவசத்துடன் மேளதாளங்கள் முழங்க ஆற்றங்கரையிலிருந்து ஊர் தலைவர் கரகம் எடுத்தும், பக்தர்கள் பால்குடம், அழகு குத்தியும், இளநீர் காவடி எடுத்தும் கிராமம் முழுவதும் சுற்றி ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குலதெய்வ குடிமக்கள், கிராம பொதுமக்கள் என ஏராளமானார் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.