செண்பகவல்லி அம்மன் கோவில் தேர் திருவிழா ஆலோசனைக் கூட்டம்
கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோவில் தேர் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ;

கோவில்பட்டியில் செண்பகவல்லி அம்மன் கோவில் தேர் திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் வரும் 13ஆம் தேதி நடைபெறும் தேர் திருவிழாவை முன்னிட்டு கிழக்கு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஜின்னா பீர்முகமது தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கம்மவார் சங்க துணைத் தலைவர் பட்டுராஜன், செயலர் அழகர்சாமி, பொருளாளர் என். ராதாகிருஷ்ணன், செண்பகவல்லி அம்மன் கோயில் செயல் அலுவலர் வெள்ளைச்சாமி, தலைமை எழுத்தர் மாரியப்பன் உள்பட கம்மவார் சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேர் திருவிழாவில், ஜாதியை சுட்டிக்காட்டும் வகையில் பனியன்களை அணியக் கூடாது, தலையில் ரிப்பன் அணியக் கூடாது, மது அருந்திய நிலையில் விழாவில் பங்கேற்கக் கூடாது. அரசியல் சம்பந்தமான பேச்சுக்களையோ, கொடிகளையோ பயன்படுத்தக் கூடாது. தேர் திருவிழா மிகவும் அமைதியாகவும் சிறப்பாகவும் நடைபெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக தேர் தடி முறைதாரர்களான மூப்பன்பட்டி வீரபாண்டியன் தலைமையிலான குழுவினருடனும் போலீசார் ஆலோசனை நடத்தினர்.