பாஜகவோடு பகை ஏற்பட்டு விடும் என்பதால் நீட் தேர்வு தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தை
எடப்பாடி பழனிச்சாமி புறக்கணிக்கிறார் - முத்தரசன் குற்றச்சாட்டு;
நாகையில் வருகிற 15 -ம் தேதி அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 30- வது தேசிய மாநாடு நடைபெற உள்ளது. வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் இறுதி நிகழ்வாக 17- ம் தேதி பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடைப்பெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நாகையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசியதாவது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒருங்கிணைக்கும் இந்த மாநாடு தற்போதைய அரசியல் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். மத்திய அரசு மூன்று மசோதாக்களை விவசாயிகளுக்கு விரோதமாகவும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும் இயற்றி உள்ளது. எதிர் கட்சிகளின் எதிர்ப்பையும், விவசாயிகளின் எதிர்ப்பையும் மத்திய அரசு காது கொடுத்து கேட்கவில்லை. கோவில் நிலங்கள், மடத்து நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அந்த நிலங்களை சொந்தமாக்க வேண்டும். கோவில் நிலங்களில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உட்பட பிரச்சனைகள் குறித்து மாநாட்டில் விவாதிக்க உள்ளோம். மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, தமிழக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கேரளா அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். பின்னர், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் கூறியதாவது தமிழக ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. அனைவரும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளனர். ஆனால், அதிமுக மட்டும் அமைதியாக விழி பிதுங்கி நிற்கிறது. அதிமுக -பாஜக கூட்டணிக்கு அதிமுக முயற்சி எடுக்கிறதோ இல்லையோ, பாஜக அந்த முயற்சியை எடுத்து வருகிறது. சீமானை திமுக ஒரு போதும் மிரட்டவில்லை. தமிழகத்தில் பாஜக காலூன்ற, சீமானை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சிக்கிறது. பாஜகவோடு பகை ஏற்பட்டு விடும் என்பதால், நீட் தேர்வு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி புறக்கணிப்பதாக தெரிவித்தார். பேட்டியின் போது, நாகை எம்பி செல்வராஜ், மாநில குழு உறுப்பினர் செல்வம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.