கடை, நிறுவனங்கள் ஆன்லைனில் பதியலாம்
சிவகங்கை மாவட்டத்தில் கடை, நிறுவனக்களை ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது;
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களை பதிவு செய்வதற்கான அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. 2.07.2024க்கு பின்னர், புதிதாக கடை மற்றும் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, 10 அல்லது 10க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள், பதிவிற்கான விண்ணப்பத்தினை தொழிலாளர் நலத்துறையின் இணையவழி தளமான https://labour.tn.gov.in என்ற இணையவழி முகவரியில், கடை மற்றும் நிறுவனம் தொடங்கப்பட்ட 6 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும். 02.07.2024க்கு முன்னர் கடை மற்றும் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, 10அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தி தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் கடைகள் மற்றும் நிறுவனங்கள் மேற்கண்ட இணைய முகவரியில் தங்களது கடைகள், நிறுவனங்களின் விபரங்களை அறிவிப்பு படிவத்தில் 1.07.2025ம் தேதிக்குள் சமர்ப்பித்தல் வேண்டும். கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் பதிவுச் சான்றிதழில் திருத்தங்கள் செய்யவும் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். எனவே, கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மேற்குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி, கடைகள் மற்றும் நிறுவனங்களின் பதிவு, அறிவிப்பு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது