பாஜகவின் புதிய மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஜி.கே. வாசன் வாழ்த்து
தமிழ்நாடு பா.ஜ.க வின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனை பாராட்டுவதாகவும், வாழ்த்துவதாகவும் தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.;

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில், "தமிழ்நாடு பா.ஜ.க வின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ அவர்களை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். இதுவரை பா.ஜ.க வில் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பில் மிகச்சிறப்பாக பணியாற்றிய அண்ணாமலை அவர்களை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின் தலைமை தமிழக பா.ஜ.க வின் மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரனை அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது. அவர் அன்பாக பழகக்கூடியவர், பண்பாளர், திறமை மிக்கவர், கடின உழைப்பாளி. பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராக மிகச்சிறப்பாக பணியாற்றிக்கொண்டிருப்பவர். தமிழ்நாடு பா.ஜ.க சட்டமன்றக் குழுத் தலைவராக இயக்க வளர்ச்சிக்கும், தொகுதியின் வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் உயர்வுக்கும் பாடுபடுபவர். மற்றும் பா.ஜ.க வை தமிழக மக்கள் மத்தியில் பிரபலமாக்கிக் கொண்டிருக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார். அந்த வகையில் நயினார் நாகேந்திரன், தமிழ்நாடு பா.ஜ.க வின் மாநிலத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு பா.ஜ.க வின் மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள நயினார் நாகேந்திரனை தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். இதுவரை தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பின் மூலம் பா.ஜ.க வினுடைய அடித்தள வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு, தொண்டர்களை தட்டி எழுப்பி, மிகச்சிறப்பாக பணியாற்றி விடை கொடுக்கும் தலைவர் அண்ணாமலையை பாராட்டி, வரும் காலங்களில் அவரது பணி இயக்கத்தில் சிறக்க வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.