திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

திருச்செந்தூரில் வைகாசி விசாகத் திருவிழா : லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!;

Update: 2025-06-09 16:30 GMT
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ்க்கடவுள் முருகப்பெருமான் அவதரித்த ஜென்ம நட்சத்திர திருவிழாவான வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வருகின்றன. மதியம் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து சண்முக விலாச மண்டபம் சேருகிறார். அங்கு வைத்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெற்று அதனைத் தொடர்ந்து மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவமும், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னர் மகா தீபாராதனை ஆகி சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் இருப்பிடம் சேர்ந்து திருவிழா நிறைவு பெறுகிறது. வைகாசி விசாகத்திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் விரதமிருந்து, பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்ததால் கோயில் வளாகத்தில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. பக்தர்கள் காவடி, அலகு குத்தியும், பால்குடம் எடுத்து வழிபட்டனர். கூட்டம் நெரிசல் காரணமாக திருக்கோயில் வளாகம், கடற்கரை உள்ளிட்ட இடங்களிலே பக்தர்கள் தாங்களே தேங்காய் உடைத்து பூஜை செய்து வருகின்றனர். பக்தர்கள் வசதிக்காக கூடுதலான சிறப்பு பேருந்துகள், திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜாண் தலைமையிலான போலீசார், தீயணைப்பு படையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் அருள்முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Similar News