மாணவிகள் தங்குமிடங்களில் பெண் காவலர்களை நியமிக்க உள்ளோம்: அமைச்சர் கீதா ஜீவன்

மாணவிகள் தங்குமிடங்களில் பெண் காவலர்களை நியமிக்க உள்ளோம்: அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்;

Update: 2025-06-09 17:01 GMT
சென்னையில் அரசு விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவிகள் தங்குமிடங்களில் பெண் காவலர்களை நியமிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார். சென்னை தாம்பரம் அருகே அரசு விடுதியில் 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விடுதி காவலர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் அமைச்சர் கீதா ஜீவன் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அரசு விடுதி காவலராலேயே நடந்த இந்த சம்பவத்தை ஏற்கவே முடியாது. இதுவரை காவலர் மேத்யூ மீது எந்த குற்றச்சாட்டும் பதிவாகவில்லை. இதுவே முதல்முறை. வார்டன் விடுமுறையில் இருந்த சமயத்தில் குற்றச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலராலேயே அத்துமீறல் சம்பவம் நடந்துள்ளதை ஏற்க முடியவில்லை. விடுதி வார்டன் விடுப்பில் சென்றநிலையில் காவலாளி அத்துமீறலில் ஈடுபட்டது அதிர்ச்சி அளிக்கிறது. தைரியமாக மாணவி குற்றஞ்சாட்டியதால் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார். பெண்கள், பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஆண்கள் ஈடுபடுவதை மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்னை சத்யா இல்லம் உள்ளிட்ட பெண்கள், பெண் பிள்ளைகள் தங்குமிடங்களில் பெண் காவலர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அரசு மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் அனைத்து இல்லங்களிலும் பாதுகாப்பிற்கு பெண் காவலர்கள் நியமிக்கப்படுவர்.தாம்பரம் அருகே அரசு விடுதியில் மாணவியிடம் காவலாளி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரையடுத்து அரசு புதிய முடிவு எடுத்துள்ளது என்று தெரிவித்தார்.

Similar News