உரிய நீதி பெற்றுத்தர வேண்டும் - கிருஷ்ணசாமி

அஜித்குமார் உயிரிழப்பிற்கு உரிய நீதி பெற்றுத்தர வேண்டும் என புதிய தமிழகம் கட்சி தலைவர் பேட்டி;

Update: 2025-07-03 12:07 GMT
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பகுதியில் கோவில் காவலர் அஜித்குமார் காவலர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது குடும்பத்தினருக்கு புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஆறுதல் தெரிவித்துள்ளார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: “தமிழகத்தில் நடந்த இந்த சம்பவம் மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கது. காவல் நிலையங்களில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதில் மிகுந்த வேதனை உள்ளது. மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது இது தொடர்ச்சியாக நடப்பது கவலையளிக்கிறது. விசாரணைக்காக அழைத்து செல்லும் போது, உச்ச நீதிமன்றம் பல வழிமுறைகளை கூறியுள்ளது. ஆனால், அந்த விதிமுறைகளை காவல்துறை பின்பற்றுவதாகத் தெரியவில்லை. தமிழக அரசு இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைத்திருக்கிறது. இருந்தாலும், குற்றவாளிகள் உரிய தண்டனை பெறுவார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது. கடந்த காலங்களில் தூத்துக்குடி போன்ற இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் அதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பதவி உயர்வு மட்டுமே கிடைத்தது. இடமாற்றம், பணியிட நீக்கம் போன்றவை கண்துடைப்பாகவே உள்ளன. தவறு செய்த அதிகாரிகள் தண்டிக்கப்படவில்லை என்ற அச்சமின்மையின் காரணமாகவே இப்படி சம்பவங்கள் தொடர்கின்றன என தெரிவித்தார்

Similar News