நினைவு தினத்தை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்
பாகனேரியில் நினைவு தினத்தை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்;
சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே பாகனேரியில் முன்னாள் மேலவை உறுப்பினர் திருஞான சம்பந்தம் நினைவு தினத்தை முன்னிட்டு மாபெரும் இரட்டைமாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. பாகனேரி - மதகுபட்டி சாலையில் நடைபெற்ற இப்போட்டியில் பெரிய மாடு, நடுமாடு, சிறிய மாடு, கரிச்சான் என 4 பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 14 ஜோடிகள், நடு மாடு பிரிவில் 22 ஜோடிகளும், இரு சுற்றுகளாக நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 28 ஜோடிகள் மற்றும் கரிச்சான் பிரிவில் 24 ஜோடிகள் என மொத்தம் 88 ஜோடிகள் பங்கேற்றன. இதில் பெரிய மாடு பிரிவிற்கு 8 மைல் தூரமும், நடுமாடு பிரிவில் 7 மைல் தூரமும், சிறிய மாடு பிரிவிற்கு 6 மைல் தூரமும், கரிச்சான் பிரிவிற்கு 5 மைல் தூரமும் பந்தய எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் தங்கள் மாடுகளுடன் கலந்து கொண்டனர். விடா முயற்சியோடு மாட்டு வண்டிகள் ஒன்றை ஒன்று இடித்து தள்ளி முன்னேறி சென்றது. போட்டியில் போராடி எல்லையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்க தொகை உள்ளிட்ட பரிசுகள் விழா குழுவின் சார்பில் வழங்கப்பட்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி போட்டியினை சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான ஆண்கள், பெண்கள் குழந்தைகள் மற்றும் ரசிகர்கள் என, நூற்றுக்கணக்கானோர் உற்சாகதோடு கண்டுகளித்தனர்.