பழையசீவரத்தில் பயன்பாட்டிற்கு வந்தது உயர்கோபுர மின்விளக்கு வசதி
பழையசீவரத்தில் அமைத்த உயர்கோபுர மின்விளக்குக்கு தற்போது இணைப்பு வழங்கப்பட்டு இரவில் ஒளிர்கிறது;
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் - செங்கல்பட்டு சாலையில் பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தம் உள்ளது. பழையசீவரம் மற்றும் பாலாற்றின் மறு கரையில் உள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர், இப்பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து பேருந்து பிடித்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்கின்றனர். மேலும், ஏராளமான பெண் தொழிலாளர்கள் இரவு நேரத்தில் இப்பேருந்து நிறுத்தம் வந்து, ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தனியார் தொழிற்சாலை வேன் மற்றும் பேருந்து மூலம் கம்பெனிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால், பழையசீவரம் மலை பேருந்து நிறுத்தத்தில் அதிகாலை துவங்கி, இரவு 10:00 மணி வரை பயணியர் வருகை இருந்தபடியே இருக்கும். இந்நிலையில், இந்த நிறுத்தத்தில் போதிய மின்வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து பயணியர் உள்ளிட்ட பலரும் நீண்ட காலமாக அவதிப்பட்டு வந்தனர். அதை தொடர்ந்து இப்பேருந்து நிறுத்தத்தில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. எனினும், மூன்று மாதங்களாக இணைப்பு வழங்காததால் இருள் பயணம் தொடர்ந்தது. இந்நிலையில், பழையசீவரத்தில் அமைத்த உயர்கோபுர மின்விளக்குக்கு தற்போது இணைப்பு வழங்கப்பட்டு இரவில் ஒளிர்கிறது.