சேலம் அருகே மனைவியுடன் குடும்ப தகராறு: தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
போலீசார் விசாரணை;
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அழகுசமுத்திரம் ஏழுமலையான்காடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலைவாணி. இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். ரமேசுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கணவனிடம் சண்டை போட்டுக் கொண்டு கலைவாணி தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். கடந்த ஒரு வாரமாக வீட்டில் தனியாக இருந்த ரமேஷ் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ரமேசின் தாயார் சின்னம்மாள் தாரமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.