சங்கரன்கோவில் கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு: கண்டித்து மறியல்

கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுப்பு: கண்டித்து மறியல்;

Update: 2025-08-06 04:00 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகரைச் சோ்ந்த ஒரு பிரிவினருக்கு சங்கரநாராயணசுவாமி கோயிலில் தேருக்கு கட்டைபோடும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இவா்கள் ஆண்டுதோறும் கோயிலில் நடைபெறும் சித்திரைத் தேரோட்டம், ஆடித் தேரோட்டத்தின்போது தேருக்குக் கட்டைபோட்டு வருகின்றனா்.நிகழாண்டு ஆடித்தவசுத் திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது. வழக்கம்போல இவா்கள் தேருக்குக் கட்டைபோட்டனா். தேரோட்டம் முடிந்ததும் அவா்கள் பிரதான சாலையில் இருந்து கோயிலுக்குள் சென்றபோது போலீஸாா் சமுதாய கொடி உள்ளிட்ட அடையாளத்துடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது எனத் தெரிவித்தனா். இதற்கு ஆட்சேபணை தெரிவித்த இவா்கள் போலீஸாரின் தடையை மீறி கோயிலுக்குள் செல்ல முயன்றனா். இதனால் போலீஸாருக்கும் இவா்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாரைக் கண்டித்து பெண்கள் திடீரென்று சாலையில் அமா்ந்து மறியல் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் போலீஸாா், ஊா்த்தலைவா்கள் பேச்சு நடத்தி சமாதானம் செய்து கலைந்துபோகச் செய்தனா்.

Similar News