தற்போது வெளியாகி உள்ள கிங்டம் படத்தின் கதையானது இலங்கையில் நடைபெறுவது போன்று உள்ளது. இலங்கைத் தமிழர்களை குற்றப்பரம்பரை போல் இந்த திரைப்படம் சித்தரிப்பதாகவும், மேலும் அங்குள்ள மலையக தமிழர்களை இலங்கை தமிழர்கள் ஒடுக்கினார்கள் என்பது போன்ற காட்சிகள் இருப்பதாக கூறி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இந்தப் படத்தை தமிழகத்தில் திரையிட்டால் தியேட்டர்களை முற்றுகையிடுவோம் என முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்தார். கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் நாகர்கோவில் திரையரங்கம் முன்பாக இன்று திரண்டு கோஷமிட்டு திரையரங்கத்தை முற்றுகையிட முயன்றனர். பின்னர் போலீசார் உடன் பேச்சுவார்த்தை நடத்தி இந்த படம் திரையரங்கில் வெளியாகாது என உறுதி அளித்த பின்னர், முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் நாகர்கோவில் திரையரங்கம் முன்பாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.