ரயில்வே புணரமைப்பு பணியில் தொடர் விபத்து
மயிலாடுதுறையில் நேற்றிரவு பலத்த காற்றுடன் பெய்த மழையில் ரயில் நிலைய நுழைவுவாயில் முகப்பு மேற்கூரை சரிந்து விபத்து நேரிட்டது. அடுத்தடுத்து தொடரும் விபத்துகளால் ரயில் பயணிகள் அதிர்ச்சி;
மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின்கீழ் ரூ.22 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்த நிலையில், ரயில் நிலைய முகப்பு மேற்கூறையில் பொருத்தப்பட்டிருந்த 4 அடி நீளம், 4 அடி அகலத்தில், தலா 35 கிலோ எடை கொண்ட 2 ஜிஆர்சி ஷீட் பெயர்ந்து விழுந்தது. நள்ளிரவு நேரம் என்பதாலும், மழை பெய்ததாலும் அங்கு ஆள் நடமாட்டம் இல்லாததால் நல்வாய்ப்பாக உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. ஜி.ஆர்.சி. ஷீட் பொருத்த பயன்படுத்தப்பட்ட ஸ்க்ரூ அளவில் மிக சிறியதாக இருந்ததே விபத்துக்கு காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், மேற்கூரை முழுவதும் ஏற்கெனவே பயன்படுத்திய சிறிய அளவிலான ஸ்க்ரூ அகற்றப்பட்டு, பெரிய ஸ்க்ரூ மாற்றப்பட்டது. இந்நிலையில், ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டிருந்த 2 ஷீட்டுகள் இன்று காலை பெயர்ந்து விழுந்தது பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் தரமானதாக இல்லை என பயணிகள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த விபத்துகள் ரயில் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.