தொடர் விடுமுறையால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
குடும்பத்துடன் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.;
இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் சுதந்திர தின விடுமுறை, நேற்று சனிக்கிழமை என்பதால் ஏற்காட்டுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் குவிந்தனர். ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை லேசான வெயில் அடித்தது. சுமார் 11 மணிக்கு மேல் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. மேலும் லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பகோடா பாயிண்ட் போன்ற இடங்களுக்கும் ஏராளமானவர்கள் குடும்பத்துடன் சென்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதேபோன்று படகு இல்லத்திலும் ஏராளமானவர்கள் குவிந்தனர். அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. மதிய நேரங்களில் உணவகங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இப்படி ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் ஏற்காட்டில் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மலைப்பாதையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுற்றுலா பயணிகள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்ல கடும் சிரமப்பட்டனர்.