புதிதாக பதவியேற்ற நாளிலே களத்தில் இறங்கிய மாவட்ட ஆட்சியர்
நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி பார்வையிட்டு, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.;
பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரில் நடைபெற்ற நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி பார்வையிட்டு, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், அரும்பாவூர் அரசு மேல்நிலை பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி இன்று (30.08.2025) பார்வையிட்டு, மருத்துவ முகாமிற்கு வந்திருந்த நபர்களின் குறைகளை கேட்டறிந்து, பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இன்று நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில் உடல் பரிசோதனை மற்றும் இரத்தப் பரிசோதனை செய்த 05 நபர்களுக்கான உடனடியாக மருத்துவ அறிக்கையினையும், 05 கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டக்கங்களையும், 15 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டையினையும், சித்த மருத்துவத்துறையின் சார்பில் 01 கர்ப்பிணிப்பெண்ணுக்கு சஞ்சீவி பெட்டகமும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற மருத்துவ முகாமினை தமிழ்நாடு முழுவதும் 02.08.2025 அன்று தொடங்கி வைத்தார்கள். இம்மருத்துவ முகாம் பெரம்பலூர் மாவட்டத்தில் துங்கபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 02.08.2025 அன்று நடைபெற்றது. மேலும், ஆலத்தூர் வட்டத்தில் கொளக்காநத்தம் அரசு மேல்நிலைப்ப பள்ளியிலும், பெரம்பலூர் வட்டத்தில் எசனை அரசு மேல்நிலைப்ப பள்ளியிலும் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, வேப்பந்தட்டை வட்டத்திற்குட்பட்ட அரும்பாவூர் அரசு மேல்நிலை பள்ளியில் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் 17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகளை சார்ந்த மருத்துவர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் மற்றும் தொழிலாளர்களுக்கு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இம்முகாமினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மருத்துவ முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களிடம் தாங்கள் எவ்வித சிகிச்சைக்காக வந்துள்ளீர்கள் என கேட்டறிந்து அது தொடர்பான மருத்துவ சிகிச்சை வழங்கிடுமாறு மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறுவது குறித்து கிராமப்புறம் உள்ளிட்ட அனைத்து தரப்பு பொதுமக்களும் அறிந்து பயன்பெறும் வகையில் தேவையான விளம்பர விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட சுகாதார அலுவலருக்கு அறிவுறுத்தினார். முகாமிற்கு வருகை தரும் பொதுமக்களுக்கு எவ்வகையான சிகிச்சைக்கு செல்கிறார்கள் என்பது குறித்து கேட்டறிந்து தன்னார்வலர்கள் மூலம் தொடர்புடைய அறைக்கு அழைத்துச்சென்று வழிகாட்ட வேண்டும். எனவும், பொதுமக்கள் ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தனித்தனியாக சிகிச்சை மேற்கொள்வதற்கு சென்று சிரமப்பட்டு வரும் நிலையில், அனைத்து வகையான நோய்களுக்கும் ஒரே இடத்தில் முகாம் நடக்கின்றன. ஒவ்வொருத்தரும் அனைத்து வகையான பரிசோதனைகளும் செய்து கொண்டு அதற்கேற்ப ஆலோசனைகளை பெற்று மருந்து மாத்திரைகளை உட்கொண்டு பயனடையலாம். கிராமப்புறங்களில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், முதியவர்கள் அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த 17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவு அரங்குகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல் பிரபு, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.கீதா, தேசிய சுகாதார இயக்க திட்ட இயக்குநர் மரு.விவேகானந்தன், வட்டார மருத்துவ அலுவலர் மரு.மீனாட்சி சுந்தரி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், வேப்பந்தட்டை வட்டாட்சியர் திரு.துரைராஜ் அரும்பாவூர் பேரூராட்சி தலைவர் வள்ளியம்மை ரவிச்சந்திரன் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.