அனல்மின் நிலையத்தில் விரைவில் வணிக மின் உற்பத்தி துவங்கும்
உடன்குடி அனல்மின் நிலையத்தில் விரைவில் வணிக மின் உற்பத்தி துவங்கும்: அதிகாரிகள் தகவல்!;
உடன்குடி அனல்மின் நிலையத்தில் சோதனை பணிகளை விரைவாக முடித்து, இந்தாண்டு இறுதிக்குள் வணிக மின் உற்பத்தி துவக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி மின்நிலையத்தின் முதல் அலகில், சோதனை மின்னுற்பத்தி துவங்கியுள்ளது. அப்போது, 87 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டது. இந்த மின்சாரம், மின் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டது. மேலும் இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது: உடன்குடி அனல்மின் நிலையத்தின் முதல் அலகில் பல தொழில்நுட்ப சவால்களை கடந்து, தொடர் முயற்சியின் காரணமாக சோதனை மின்னுற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக, சோதனை செய்த போது 10 தொழில்நுட்ப இடர்பாடுகள் கண்டறியப்பட்டு, அவை சரி செய்யப்பட்டது. தற்போது, கனரக உலை எண்ணெய் பயன்படுத்தி, மின்னுற்பத்தி செய்யப்படுகிறது. கப்பலில் இருந்து முனையத்துக்கு நிலக்கரி எடுத்து வருவதற்கான அமைப்பு ஏற்படுத்தும் பணிகள் விரைவில் முடிக்கப்படும். வணிக மின்னுற்பத்தியை தொடங்க திட்டமிட்டபடி அனைத்து அலகுகளில் உற்பத்தி செய்ய வேண்டும். ஒரு மின்நிலையம் முழு திறனில், 72 மணி நேரத்துக்கு தொடர்ந்து மின்னுற்பத்தி செய்தபின், வணிக மின் உற்பத்தி துவங்கியதாக அறிவிக்கப்படும். எனவே, உடன்குடியில் சோதனை பணிகளை விரைவாக முடித்து, இந்தாண்டு இறுதிக்குள் வணிக மின் உற்பத்தி துவக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்..