ஆடு, கோழிகளை கடித்து குதறும் தெரு நாய்களால் கால்நடை வளர்ப்போர் வேதனை

குமாரபாளையம் அருகே தெரு நாய்களால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கிராமத்தில் ஆடு மேய்க்கும் கூலி தொழிலாளர்கள் வேதனை.தெரிவித்தனர்.;

Update: 2025-11-09 14:56 GMT
குமாரபாளையம் அருகே உள்ள குள்ளநாய்க்கன்பாளையத்தில் பெரும்பாலோர் கால்நடை வளர்ப்பு தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள மேய்ச்சல் நிலங்களில் ஆடுகளை மேய்க்கும் கூலி தொழிலாளர்கள், ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த போது, அங்கு சுற்றி திரியும் நாய்கள் தங்கள் ஆடுகளையும் கோழிகளையும் பிடித்து கொன்று விடுவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளையும் 50க்கும் மேற்பட்ட கோழிகளையும் தெரு நாய்கள் கடித்துக் குதறியுள்ளன. நேற்று காலை வழக்கம் போல் தொழிலாளர்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது கூட்டமாக வந்து தெரு நாய்கள் இரண்டு ஆடுகளையும், இரண்டு கோழிகளையும் கடித்து குதறிவிட்டு சென்றன. அதனை தடுக்கச் சென்ற தொழிலாளர்களையும் நாய்கள் தாக்க முற்படுவதால் அவர்கள் அச்சத்துடன் உள்ளனர். எனவே கிராமப் பகுதியில் உள்ள தெரு நாய்களை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News