கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி உயர திருவள்ளுவர் சிலை மற்றும் இவற்றை இணைக்கும் கண்ணாடி பாலம் ஆகியவற்றை தின மும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். பயணிகள் வசதிக்காக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் படகு போக்கு வரத்தை நடத்திவருகிறது. இதற்காக பொதிகை, குகன் விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. தினமும் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை இடைவேளையின்றி தொடர்ச்சியாக படகு போக்குவரத்து நடந்து வருகிறது. கண்ணாடி பாலம் அமைக்கப்பட்ட பிறகு கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக உள்ளது. அவர்கள் விவேகானந்தர் நினைவு மண்டபம். 133 அடி உயர் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலம் ஆகியவற்றை படகில் சென்று ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர். கடந்த மாதம் சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமானது. விவேகானந்தர் நினைவு மண்டபம். திருவள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாலம் ஆகியவற்றை கடந்த மாதம் மட்டும் 2 லட்சத்து 20 ஆயிரத்து 200 சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர். இதில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்து படகில் பயணம் செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது