ஒற்றை யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து 3 மணி நேரம் போராடி வனத்துக்குள் விரட்டினர்
அருள்வாடி கிராமத்தில் நள்ளிரவில் தோட்டத்துக்குள் புகுந்து சோள பயிர்களை சேதப்படுத்திய ஒற்றை யானை;

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் வறட்சியான சூழ்நிலை நிலவி வருவதால் வனப் பகுதியில் உள்ள குளம், குட்டைகள் நீர்நிலைகள் வற்ற தொடங்கியுள்ளன. இதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் வனத்துறை சார்பில் வனப்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் லாரிகள் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் உணவு தண்ணீரை தேடி அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் சாலையோரம் உலா வருவதும், இரவு நேரங்களில் கிராமத்துக்குள் புகுந்து விவசாய விளை நிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது. இந்நிலையில் தாளவாடி அடுத்த அருள்வாடி கிராமத்தில் சதீஷ் என்பவர் கடந்த தோட்டத்தில் சோள பயிரிட்டு இருந்தார். நேற்று இரவு அவர் வழக்கம்போல் தோட்டத்தில் காவலில் இருந்தார். அப்போது இரவு 10 மணி அளவில் கர்நாடகா வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை ஒன்று சதீஷ் தோட்டத்துக்குள் புகுந்தது. அந்த ஒற்றை யானை தோட்டத்தில் இருந்த சோள பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தியது. திடீரென சத்தம் கேட்டு எழுந்த சதீஷ் டார்ச் லைட் அடித்து பார்த்தபோது தோட்டத்தில் ஒற்றை யானை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் சத்தம் போட அருகில் இருந்தவர்கள் அவர் தோட்டத்திற்கு வந்தனர். பின்னர் யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கிடையே வனத்துறையினருக்கும் இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பட்டாசை வெடித்து ஒற்றை யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். தோட்டத்தை சுத்தி சுத்தி வந்து போக்கு காட்டிய ஒற்றை யானை நள்ளிரவு ஒரு மணி அளவில் தோட்டத்திலிருந்து வெளியேறி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.