கட்டிட தொழிலாளியை கொன்ற 3 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை
சேலம் கோர்ட்டு தீர்ப்பு;
சேலம் மாவட்டம் மூங்கில்பாடி சேனைகவுண்டனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 25), கட்டிட தொழிலாளி. இவர், கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ந் தேதி தனது நண்பர்களான ரகுபதி (24), மணிமாறன் (23), தமிழ்செல்வன் (23) ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். பின்னர் அவர்கள் சேனைகவுண்டனூர் பகுதியில் உள்ள சுடுகாடு பகுதிக்கு சென்று 4 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அன்று இரவு மணிகண்டன் வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தனர். இதையடுத்து மறுநாள் அவரது உறவினர்கள் சுடுகாடு பகுதிக்கு சென்று பார்த்தபோது அங்கு மணிகண்டன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், நண்பர்களுடன் மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் முதுகு தண்டில் அடிபட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மணிமாறன், ரகுபதி, தமிழ்செல்வன் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சேலம் 2-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. அதில், மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி மணிகண்டனை கொலை செய்த மணிமாறன், ரகுபதி, தமிழ்செல்வன் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எழில்வேலவன் தீர்ப்பு கூறினார்.