தூத்துக்குடி ரயில் நிலையத்தில் 3 மாணவர்கள் மீட்பு

சென்னையில் ஆசிரியர் கண்டித்ததால் ரயில் ஏறி தூத்துக்குடி வந்த 9-ஆம் வகுப்புப் பயிலும் 3 மாணவர்கள் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளனர்;

Update: 2025-08-07 09:17 GMT
சென்னையில் ஆசிரியர் கண்டித்ததால் ரயில் ஏறி தூத்துக்குடி வந்த 9-ஆம் வகுப்புப் பயிலும் 3 மாணவர்கள் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டுள்ளனர்.  சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயில், சத்யா நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ராமதாஸ் மகன் சுதீக்சன், மோகனசுந்தரம் மகன் முகேஸ்வரன், சதீஷ்குமார் மகன் சபரீஷ்வரன் ஆகிய 3 பேரும் சென்னை, அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்புப் படித்து வருகின்றனர். மூவரையும், வகுப்பறையில் பாடத்தைச் சரியாக கவனிப்பதில்லை என பள்ளித் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் கண்டித்தனராம். இந்த நிலையில், இவர்கள் 3 பேரும் தங்களது புத்தகப் பையையுடன், மாற்று உடைகளை அணிந்து அம்பத்தூரிலிருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்று, பின்னர் அங்கிருந்து எழும்பூர் ரயில் நிலையம் சென்றனர். அங்கிருந்து முத்துநகர் விரைவு ரயிலில் ஏறி 3 பேரும் தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்தனர். இதற்கிடையே, 3 மாணவர்களின் பெற்றோரும் மகன்களைக் காணவில்லை என சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்தத் தகவல் தூத்துக்குடி ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே காவல் துறைக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் தூத்துக்குடி ரயில் நிலையத்துக்கு நேற்று காலை வந்த முத்துநகர்விரைவு ரயிலில் சோதனை செய்தனர்.  அப்போது சென்னையிலிருந்து தப்பிவந்த 3 மாணவர்களையும் மீட்டு, தூத்துக்குடி ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களை அழைத்துச் செல்வதற்காக தூத்துக்குடிக்கு பெற்றோர் வந்து கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Similar News