தெரு நாய் கடித்து 30க்கும் மேற்பட்டோர் காயம்
பள்ளி பாளையத்தில் தெரு நாய் கடித்து 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததால் பரபரப்பு;
பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிகிறது. ஞாயிற்றுக்கிழமை அன்று காலை பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட பெரியார் நகர், ஆவரங்காடு ,காந்திபுரம், நான்காவது கிராஸ், ஆர்.எஸ் ரோடு சாலை என பல்வேறு இடங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்டோரை தெரு நாய் ஒன்று கடித்தது. இதில் பள்ளிப்பாளையம் நகராட்சி தூய்மை பணியாளர் சண்முகசுந்தரம் 22 வயது இளம்பெண் சுபா, 8 வயது சிறுவன்,சேகர்,நாகராஜன், திருநாவுக்கரசு உள்ளிட்ட பலரும் காயமடைந்து, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் பள்ளிபாளையம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர் சண்முகசுந்தரம் என்பவர் கைவிரலை தெரு நாய் கடித்துக் குதறியதில் கைவிரல் பலத்த சேதம் அடைந்தது. நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக அரசு மருத்துவமனைக்கு ரத்தம் சொட்ட சொட்ட வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.ஒரே நாளில் 30-க்கும் மேற்பட்டோரை தெரு நாய் கடித்த சம்பவம் பள்ளிபாளையம் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொதுமக்களை கடித்த தெரு நாயை நகராட்சி நிர்வாகத்தினர் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பிடித்தனர். மேலும் அதிகரித்து வரும் தெரு நாய் எண்ணிக்கை கட்டுப்படுத்தி, பொதுமக்களின் அச்சத்தை நகராட்சி நிர்வாகம் போக்க வேண்டும் என்பது பொது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது...