குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.

பொத்தனூரில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்.;

Update: 2025-04-19 13:38 GMT
பரமத்தி வேலூர்,ஏப்.19:     பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி எதிரில் உள்ள வீதியில் கீற்று மற்றும் தகரத்தால் வேயப்பட்ட குடிசை வீட்டில் பாலகிருஷ்ணன் (50) குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் பாலகிருஷ்ணன் குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது குடிசை வீட்டில் திடீரென தீ பற்றி எரிய ஆரம்பித்தது. அதைப் பார்த்த பாலகிருஷ்ணன் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களை அழைத்து தீயை அணைக்க முயற்சி செய்தார். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. தீ மள மளவென பரவி வீடு முழுவதும் எரிய ஆரம்பித்தது .இதுகுறித்து பாலகிருஷ்ணன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார் .தகவலின் அடிப்படையில் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலை மையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து வந்து குடிசை வீட்டில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தி அருகில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு தீ பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ரூ 4 லட்சம் மதிப்பிலான குடிசை வீடு, குடிசை வீட்டுக்குள் இருந்த பீரோ, கட்டில், டிவி பேன், துணிமணிகள், உணவு பொருட்கள் மற்றும் பல்வேறு வகையான ஆவணங்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து வேலூர் பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Similar News