பள்ளியின் 50-வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு

ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை முன்னாள் மாணவர்கள் வழங்கினர்;

Update: 2025-03-30 08:36 GMT
நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த கொடியாலத்தூர் கிராமத்தில்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியின், 50 -ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு, இப்பள்ளிக்கு தேவையான பொருள்களை முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், கிராம மக்கள்  சார்பில் கல்வி சீராக வழங்க திட்டமிட்டனர். அதன்படி, பள்ளிக்கு தேவையான இருக்கைகள், எல்இடி டிவி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கும் ஆர்வோ வாட்டர் மெசின், பீரோ, குடம், பாய்கள், மின் விசிறிகள், இருக்கைகள், சாக்பீஸ் உட்பட ரூ.3 லட்சம் மதிப்பீலான  பொருள்களை வீட்டு விசேஷத்திற்கு சீராக கொண்டு செல்வது போல எடுத்து சென்று அசத்தினர். கொடியாலத்தூர் பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலிலிருந்து, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணியாக சீர்வரிசை பொருள்கள் பள்ளிக்கு எடுத்து வரப்பட்டது. கல்வி சீர்வரிசை எடுத்து வரும் விழாவை, கீழ்வேளூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் ரா.அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் மு.ஜான்சி ராணி தலைமையில் நடைபெற்ற விழாவில், பள்ளி வளர்ச்சி குழு தலைவர் ஜி.குருமூர்த்தி, கொடியாலத்தூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் மீ.கல்பனா வரவேற்றார். பள்ளி ஆசிரியர் கோ.வைரப்பன் ஆண்டறிக்கை வாசித்தார். பள்ளிக்கான இடத்தை தானமாக வழங்கிய கும்பகோணம் டி.எஸ்.சுவாமிநாத உடையார் குடும்பத்தினருக்கு, கீழ்வேளூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் வே.சிவக்குமார் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். சிறப்பு விருந்தினராக, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் கலந்து கொண்டு, பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். முன்னதாக, பொன்விழா கல்வெட்டினை நாகை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் எம்.துரைமுருகு திறந்து வைத்தார். பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விழாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. விழாவில், பள்ளி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பொன்விழா நிர்வாக குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், பள்ளி ஆசிரியை என்.சுதா நன்றி கூறினார்.

Similar News