மாநகர போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 532 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ள 532 பணியிடங்களுக்கு ஓட்டுநர்களை வழங்க விரும்பும் ஒப்பந்த நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.;

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் வழித்தடங்களில் பேருந்துகளை இயக்குவது தவிர்த்து, பணிமனை ஓட்டுநர்கள் என்ற பணியிடம் உள்ளது. இப்பணியில் இருப்போர் பணிமனைக்கு வரும் பேருந்தில் டீசல் நிரப்புவது. அதிகாரிகளுக்கு ஜீப் ஓட்டுவது போன்ற பணிகளை மேற்கொள்வர். உடல்நலப் பிரச்சினை காரணமாக பேருந்தை இயக்க முடியாதவர்களுக்கு, இப்பணியிடங்களில் வேலை வழங்கப்படும். ஆனால், இங்கு பெரும்பாலும் ஆளுங்கட்சி தொழிலாளர்களே பணியில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஓட்டுநர் பற்றாக்குறையும் நிலவியதால், அந்த பணியிடங்களில் இருக்கும் அனைவரும் வழித்தடத்தில் பேருந்தை இயக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து, பணிமனை ஓட்டுநர் பணியிடங்களுக்கு ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து ஓட்டுநர்களை நியமிக்க கடந்த 2022-ம் ஆண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதனால், மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஓரளவு ஓட்டுநர் பற்றாக்குறை செய்யப்பட்டது. அப்போதைய டெண்டர் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் 532 பணியிடங்களுக்கு ஓட்டுநர்களை வழங்க விரும்பும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வாகும் நிறுவனம், குறைந்தபட்ச கூலி சட்டப்படி ஓட்டுநர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். பேருந்து, தொழிலாளர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகள் டெண்டர் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.