திமுக நிர்வாகி தாக்கியதில் காயமடைந்த அதிமுக நிர்வாகி உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே முன் விரோதம் காரணமாக திமுக கிளைச்செயலாளர் தாக்கியதில், காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த அதிமுக கிளை செயலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-10 07:05 GMT

பெரம்பலூர் அருகே உள்ள வேலூர் கிராமத்தில், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி தெரு பைப்பில் தண்ணீர் பிடிப்பதில் திமுக கிளைச் செயலாளர் செந்தில்குமார் குடும்பத்தினருக்கும், அதிமுக கிளை செயலாளர் சுப்பிரமணி குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 7ம் தேதி, அதே ஊரில் கோவிலில் நடந்த கோவில் திருவிழாவின் போது, பூஜை செய்வதில் ஏற்கெனவே முன்விரோதத்தில் இருந்து வந்த திமுக கிளைச் செயலாளர் செந்தில்குமார் தரப்பினருக்கும், அதிமுக கிளை செயலாளர் சுப்பிரமணி தரப்பினருக்கும் இடையேவாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அது மோதலாக மாறி ஒருவரை ஒருவர் கற்கள் மற்றும் கட்டைகளால் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இதில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து பெரம்பலூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் அடிதடி, தாக்குதல், உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் இருதரப்பு மீது ம் வழக்குப் பதிவு செய்து மூன்று பேரை கைது செய்தனர்.

இந்நிலையில் தாக்குதல் சம்பவத்தின் போது, படுகாயம் அடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேலூர் அதிமுக கிளை செயலாளர் சுப்ரமணி மே- 9ம் தேதி சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார். இதனையடுத்து வேலூர் திமுக கிளை செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் மீது பெரம்பலூர் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து, செந்தில்குமார், இவரது மகன் விக்னேஸ்வரன், இவரது சகோதரர் சதீஷ்குமார், சதீஷ்குமாரின் மனைவி அமுதா, இவர்களது மகன் , உறவினர்கள், ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News