செங்கல்பட்டில் விசாரணைக்கு வந்த முதியவர் உயிரிழப்பு

செங்கல்பட்டில் விசாரணைக்கு வந்த முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2023-12-22 11:28 GMT
செங்கல்பட்டில் விசாரணைக்கு வந்த முதியவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த திருநீர்மலை பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (66). இவர் கடந்த 2002ம் ஆண்டு திருநீர்மலை பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த செல்வம் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகி வந்தார். இந்த நிலையில் நேற்று தனது மகன் தமிழரசனுடன் (36) செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு செல்வம் வெளியே வந்தார். அப்போது திடீரென அவர் மயங்கி கீழே விழுந்தார்.

இதைத்தொடர்ந்து தமிழரசன் செல்வத்தை மீட்டு உடனே அருகில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நெஞ்சு வலி காரணமாக செல்வம் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். தகவலறிந்த செங்கல்பட்டு நகர போலீசார், மருத்துவமனைக்கு விரைந்து சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News