சிவகங்கை அருகே பயோ கேஸ் மூலம் சத்துணவு சமையல்
சிவகங்கை அருகே பயோ கேஸ் மூலம் சத்துணவு சமையல் முறையை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்;
பயோ கேஸ் மூலம் சத்துணவு சமையல்
சிவகங்கை மாவட்டம், மறவமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு விறகு அடுப்பில் சத்துணவு சமைத்து வழங்கப்பட்டு வந்தது. அதன்மூலம் உண்டாகும் புகையால் சமையலர்கள், மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகி வந்தனர்.
இப்பிரச்சினையை போக்க ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் ஏற்பாட்டில் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் பள்ளி வளாகத்தில் ரூ.15 லட்சத்தில் காய்கறி, உணவுக்கழிவுகளில் இருந்து தயாரிக்கும் பயோ கேஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதில் இருந்து கிடைக்கும் எரிவாயு மூலம் மாணவர்களுக்காக சத்துணவு சமைக்கப்பட உள்ளது.
நாள் ஒன்றுக்கு அதிகபட்சம் 200 முதல் 250 கிலோ காய்கறி, உணவுக்கழிவு மூலம் 3 மணி நேரத்துக்குரிய எரிவாயு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் இன்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். இதில் பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்