செயல்படாத வட்டம்பாக்கம் சாலை காவல் சேவை மையம்
வட்டம்பாக்கம் சாலையில் காவல் சேவை மையத்தில் காவலர்கள் பணியமர்த்தப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
Update: 2023-10-29 05:46 GMT
ஒரகடம் அருகே, பனப்பாக்கம் - வட்டம்பாக்கம் சாலையில், நாவலுாரில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றியவர்களுக்கு வீடு வழங்கப்பட்டுள்ளது. 2,000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், இந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், கஞ்சா, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் உள்ளனர். இதை தடுக்க பனப்பாக்கம் கூட்டுச்சாலை சந்திப்பில், ஒரகடம் காவல் நிலையம் சார்பில், காவல் சேவை மையம் அமைக்கப்பட்டது. இங்கு காவலர்கள் பணியில் இல்லாமல் மூடியே உள்ளது. இதனால், இந்த வழியே செல்வோர் அச்சமடைகின்றனர். இந்த காவல் சேவை மையத்தை திறந்து, 24 மணி நேரமும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.