மோட்டார் சைக்கிள் மீது மிளா மோதியதில் அரசு பஸ் கண்டக்டர் மரணம்

கன்னியாகுமரியில் மோட்டார் சைக்கிள் மீது மிளா மோதிய விபத்தில் பஸ் கண்டக்டர் மரணமடைந்தார்.;

Update: 2024-03-23 04:48 GMT

மரணம் 

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தெற்கு கரையான்குழி பகுதியை சேர்ந்தவர் தனபால் (53).இவர் கன்னியாகுமரி அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை பணிக்கு செல்வதற்காக உறவினர் பென்னட் என்பவர் உடன் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டார். அப்போது மோட்டார் சைக்கிளை பென்னட்  ஓட்ட தனபால் பின்னால் அமர்ந்து இருந்தார். பொற்றையடி சாய்பாபா கோவில் அருகே செல்லும்போது புத்தனாறு கால்வாயில் இருந்து ஓடி வந்த மிளா ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது.  இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம் பக்கத்தினர். மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு  அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி தனபால் நேற்று உயிரிழந்தார். பென்னட் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News