மதுரையில் போட்டியிடும் அதிமுக, மார்க்சிஸ்ட் வேட்பாளர் நலம் விசாரிப்பு

மதுரை தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்;

Update: 2024-03-28 16:31 GMT

நலம் விசாரித்து கொண்ட வேட்பாளர்கள்

இன்றைய வேட்பு மனு பரிசீலனையின் போது, மதுரை தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேட்பாளர்கள் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி பரஸ்பரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சி தலைவர்களை எதிரிக் கட்சி தலைவர்களாக பார்க்கும் போக்கு இருக்கிறது. இதனால் அரசியல் நாகரிகத்தைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கண்ணியமற்ற முறையில் தனி மனித தாக்குதல்களை நடத்துகிறார்கள். விடியா திமுக அரசு என்று எடப்பாடி பழனிசாமியும், பாதம் தாங்கி பழனிசாமி என்று ஸ்டாலினும் ஒருவரை ஒருவர் விமர்சிக்கிறார்கள்.

Advertisement

பாஜக தலைவர் அண்ணாமலையை திமுக மற்றும் அதிமுக கட்சிகளும், இந்த கட்சிகளின் தலைவர்களை பாஜக தலைவர்களும் வஞ்சகம் இல்லாமல் போட்டுத் தாக்குகிறார்கள். இருந்த போதும் இந்தத் தேர்தலில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அரசியல் அதிசயங்களும் நடக்க ஆரம்பித்திருக்கின்றன.

வேட்பாளர்கள் சந்திக்கும் போது ஒருவருக்கொருவர் கைகுலுக்கியும் கட்டித் தழுவியும் அன்பை வெளிப்படுத்திக் கொள்கிறார்கள். அப்படித்தான் தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி அன்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.

விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரும், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் நவாஸ்கனியும் ஓபிஎஸ்சும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டதும் அப்படித்தான். இதன் தொடர் நிகழ்வாக இன்று மதுரை தொகுதிக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்த போது அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணனும்,

மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனும் சிரித்தபடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஒருவருக்கொருவர் கைக்குலுக்கி வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டனர். இந்த அன்பும், அரசியல் நாகரிகமும் அனைத்து மட்டத்திலும் தொடர வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பம்.

Tags:    

Similar News