தொழிலாளி சாவில் திடீர் திருப்பம் - மகளே அடித்துக் கொன்றது அம்பலம்
பூதப்பாண்டியில் தொழிலாளி உயிரிழந்த விவகாரத்தில் அடித்து கொலை செய்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கிடைத்த தகவலையடுத்து தொழிலாளியின் மூத்த மகளை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள கடுக்கரையை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (46) கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி இரண்டு மகள்களும் உள்ளனர். சுரேஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கத்தால் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்று விட்டார். அதன் பின்பு இரண்டு மகள்களையும் சுரேஷ்குமார் பராமரித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி சுரேஷ்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் பூதப்பாண்டி போலீசார் சம்பவ இடத்தில் சென்று சுரேஷ்குமாரின் மகள்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது மகள்கள் இருவரும் தந்தைக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு என்பதால் அதிக மது போதையில் இறந்ததாக கூறினர். போலீசார் உடலை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி அனுப்பி வைத்தனர். அத்துடன் மகள்கள் கூறிய தகவலின் அடிப்படையில் மது போதையில் இறந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், சுரேஷ்குமாரை தலையில் கட்டையால் அடித்துக் கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இறங்கிய போலீசார் சுரேஷ்குமார் மகள்களிடம் மீண்டும் விசாரணை நடத்த தொடங்கினார். அப்போது 21 வயதான மூத்த மகளின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர் விசாரணையில் சம்பவ தினம் சுரேஷ்குமார் அதிக மது போதையில் வீட்டுக்கு வந்ததாகவும், இதனால் அவருக்கும் மூத்த மகளுக்குமிடையே இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதில் மகள் கட்டையால் தந்தையின் தலையில் தாக்கியதாகவும், இதில் அவர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. இதை அடுத்து மூத்த மகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.