கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி மோதி விபத்து - 4 பேர் காயம்
ஆரல்வாய்மொழி அருகே கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் கணவன், மனைவி, குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்தனர்.;
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி முத்து நகரை சேர்ந்தவர் அந்தோணி பிரான்சிஸ் (33) இவர் நேற்று மாலை தனது மனைவி அனிதா மற்றும் தனது குழந்தையுடன் பைக்கில் நாகர்கோவில் - காவல் கிணறு நான்கு வழி சாலையில் சென்று கொண்டிருந்தார். பைக் கண்ணுபொத்தை என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு சென்ற மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து நான்கு வழி சாலை சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதி கவிழ்ந்து, பல அடிதூரம் இழுத்துச் செல்லப்பட்டது.
அப்போது அதே சாலையில் சென்று கொண்டிருந்த அந்தோணி பிரான்சிசின் பைக்கில் மினி லாரி மோதியது. இதனால் பைக்கில் சென்ற அந்தோணி பிரான்சிஸ், அனிதா மற்றும் குழந்தை தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். காயமடைந்த மூன்று பேரையும் நெடுஞ்சாலை போலீசார் நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் மினி லாரியை ஓட்டி வந்த மதுரை பகுதி சிரஞ்சீவி என்பவர் காயமடைந்தார். அவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.