திமுக முப்பெரும் விழா பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம்!

திமுக முப்பெரும் விழா கூட்டணி கட்சியினர் 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.

Update: 2024-06-14 09:58 GMT

ஏற்பாடு

கோவை கொடிசியா மைதானத்தில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நாளை மாலை நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்ட நிகழ்விற்காக மேடை அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

2024 நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதற்கு முதல்வருக்கு பாராட்டு விழா,கலைஞர் நுற்றாண்டு நிறைவு விழா, தமிழ்நாடு புதுவையில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி விழா என முப்பெரும் விழாவாக இந்த பொது கூட்டம் நடத்தப்படுகின்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நாளை பிற்பகல் கோவை வருகிறார்.திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களும் இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.இது தவிர தமிழகம் மற்றும் புதுவையில் 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற 40 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த பொதுக்கூட்ட நிகழ்வில் பங்கேற்க இருக்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுகவின் மூத்த அமைச்சர்கள் முத்துசாமி,எ.வ.வேலு, ஆ.ராசா,சாமிநாதன் ஆகியோர் கோவையில் முகாமிட்டு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.நாளை நடைபெறும் பொதுக்கூட்ட நிகழ்விற்கு கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து தொண்டர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு மண்டலம் திமுக வசம்தான் இருக்கிறது என்பதை பொதுமக்களுக்கு காட்டும் விதமாகவும்,28 ஆண்டுகளுக்குப் பிறகு கோவை மக்களவைத் தொகுதி திமுக வசம் வந்திருக்கும் வெற்றியை பறைசாற்றும் விதமாகவும் இந்த பொதுக்கூட்டம் பிரமாண்டமாக நடத்தப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News