குமரி மாவட்டம் திருவட்டாறு அருகே உள்ள வீயன்னூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார் (45). சென்ட்ரிங் தொழிலாளி. இவர் தங்கலட்சுமி என்ற பெண்ணுடன் முதலில் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர் இறந்த நிலையில், ரம்யா (36) என்பவரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. செந்தில்குமாருக்கு கடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது. வீட்டை ரூ. 7லட்சத்திற்கு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் அடகு வைத்திருந்தார். இந்த பணத்தை சரியாக கட்ட முடியாததால் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இவருக்கு மது குடிக்கும் பழக்கமும் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று 23ஆம் தேதி ரம்யா உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். பின்னர் அவர் வீட்டில் வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக வீடு பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்த போது செந்தில்குமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததை ரம்யா கண்டார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து செந்தில் குமாரை மீட்டுகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறினர். இது குறித்து திருவட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.