
கன்னியாகுமரி மாவட்ட பாரதிய மஸ்தூர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இ பி எஸ் 95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் 5 ஆயிரம் என உடனடியாக உயர்த்த வேண்டும், தொழிலாளர் சம்பளத்தில் வருங்கால வைப்பு நிதி கட்டாய பிடித்தம் செய்வதற்கான ஊதிய உச்சவரம்பு ரூ 15 ஆயிரத்தை 30 ஆயிரமாக உயர்த்த வேண்டும், தொழிலாளர் ஈட்டுறுதி கழகத்தின் சமூக பாதுகாப்பை பெறுவதற்கான தகுதியை நிர்ணயிக்கும் ஊதிய உச்சவரம்பு ரூபாய் 21 ஆயிரம் என்ற தொகையை 42 ஆயிரமாக உயர்த்த வேண்டும், பொது சொத்துக்களை விற்று பணமாக்குவது உடனடியாக நிறுத்த வேண்டும், காப்பீடு மற்றும் நிதித்துறைகளில் 100% அந்நிய முதலீட்டை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜாமணி தலைமை வகித்தார். பாரதிய பொது தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுச்செயலாளர் கிரிஷ், மாவட்ட அமைப்பாளர் முருகன், மாவட்ட நிர்வாகி குமாரதாஸ் உட்பட பலர் பேசினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.