குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் இந்த ஆண்டு மாசி கொடை விழா கடந்த 2ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11ஆம் தேதி நள்ளிரவில் ஒடுக்கு பூஜையுடன் நிறைவடைந்தது. இதன் தொடர்ச்சியான எட்டாம் கொடை விழா நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு காலை 4:30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இரவு 8.30 மணிக்கு அத்தழ பூஜை நடைபெற்றது. விழாவில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், கேரளாவில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு பொங்கல் வழிபாடு நடத்தினர். அந்த பகுதி முழுவதும் தோப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டமாக சமையல் செய்து பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டனர். பக்தர்கள் நேற்று அதிக அளவில் குவிந்ததால் கோவில் சன்னதி, பொங்கலிடும் பகுதி, கடற்கரை, பஸ் ஸ்டாப் ஆகி இடங்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மாசி கொடையின் தொடர்ச்சியாக வரும் 31 ஆம் தேதி மீனப்பரணி கொடை விழாவும் நடக்கிறது.