சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ஆணவ கொலைக்கு எதிராக கோஷம்;
சேலம் மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாதி ஆணவ படுகொலை தடுப்பு சட்டத்தை உடனே நிறைவேற்றக்கோரி சேலம் கோட்டை பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர்கள் காஜாமைதீன், மொழியரசு, மெய்யழகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட துணை செயலாளர் வேலுநாயக்கன் வரவேற்றார். மண்டல செயலாளர் இமயவரம்பன், மண்டல துணை செயலாளர் ஆறுமுகம், முன்னாள் மண்டல செயலாளர் நாவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், மாநில துணை பொதுச்செயலாளர் கவுதம சன்னா கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதனை தொடர்ந்து தூத்துக்குடி ஐ.டி. ஊழியர் கவின் ஆணவ படுகொலையை கண்டித்தும், சாதிய ஆணவ படுகொலை நடப்பதை தடுக்கும் வகையில் உடனடியாக தனி சிறப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.