தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே அயோத்திப்பட்டியில் மருத்துவக் கழிவு பொருள்களை எரித்து அழிக்கும் இடத்தில், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக் முன்னிலையில் 1,000 கிலோ பொருள்களை செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் எரியூட்டி அழித்தனர். தஞ்சாவூர் காவல் சரக்கத்தில் போதை பொருள்களுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் 317 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1,000 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதனை எரித்து அழிப்பதற்கான நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் ஜியாவுல் ஹக் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை எரியூட்டி அழிக்கப்பட்டது. இந்நிகழ்வில், தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.ராஜாராம், துணை கண்காணிப்பாளர்கள்(மதுவிலக்கு) திவ்யா, ஆனந்த் (நாகை), ராதாகிருஷ்ணன் (திருவாரூர்), அருள்மொழி அரசு (திருவையாறு) மற்றும் வட்டார தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர் காயத்ரி ஆகியோர் உடன் இருந்தனர்.