அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மேலும் ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க அரசுக்கு உத்தரவு
சென்னை அண்ணாநகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கெனவே ரூ.1 லட்சம் வழங்கப்பட்டுள்ள நிலையில், மேலும் ரூ. 3 லட்சத்தை இடைக்கால நிவாரணமாக 4 வார காலங்களில் வழங்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.;

சென்னை அண்ணாநகரை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுதொடர்பாக புகார் அளிக்கச் சென்ற பெற்றோரை, அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸார் தாக்கியது தொடர்பாக, தாமாக முன்வந்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு தடை விதித்து, இந்த சம்பவம் தொடர்பாக சென்னை பெருநகர காவல் இணை ஆணையராக பதவி வகித்த சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் ஆவடி சட்டம் - ஒழுங்கு துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் மாநகர வடக்கு துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த குழு, தனது விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சிறுமியின் வாக்குமூலத்தை பொதுவெளியில் கசியவிட்டது தொடர்பாக மற்றொரு சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து உயர் நீதிமன்றம் முடிவெக்க உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் இழப்பீடு கோரி தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஏற்கெனவே ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் ரூ. 3 லட்சம் மேலும் இடைக்கால நிவாரணமாக வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது எனக்கூறி அதை தாக்கல் செய்தார். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், சிறுமிக்கு இடைக்கால நிவாரணமாக இந்த ரூ.3 லட்சத்தை 4 வார காலத்துக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.