ஜல்லிக்கட்டில் உயிரிழந்த வீரரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதல்வர் உத்தரவு
மதுரை கீழக்கரை கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.;

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டம், கீழக்கரை கிராமத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் கடந்த 16.03.2025 அன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியில் மாடுபிடி வீரராக பங்கேற்ற வாடிப்பட்டி வட்டம், மேலக்கால் கிராமம், உட்கடை கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த மகேஷ்பாண்டியை (வயது 24) மாடு முட்டியதில் பலத்த காயமடைந்து சிகிச்சை அளிக்கப்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன். மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்த மகேஷ்பாண்டியின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.