நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம் - ஆட்சியர் தகவல்

கால்நடைத் துறையின் சார்பில் அரசு மானியத்துடன் நாட்டுக்கோழி பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-04 07:52 GMT

ஆட்சியர் ஜெயசீலன்

தமிழக அரசினால் கிராமப்புறங்களில் சிறிய அளவிலான (250 கோழிகள் / அலகு) நாட்டுக்கோழிப் பண்ணை அலகுகள் 50 சதவீத மானியத்தில் 3 முதல் 6 பயனாளிகளுக்கு 2024-2025 ஆம் ஆண்டில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு அலகிற்கான திட்ட மதிப்பீட்டில் (கோழிகொட்டகை கட்டுமான செலவு, உபகரணங்கள் வாங்கும் செலவு) 50 சதவீத மானியமாக ரூ.1,56,875/- யை தமிழக அரசு வழங்குகிறது. ( 50 சதவீத பயனாளியின் பங்குத் தொகை ரூ.1,56,875/-).  இத்திட்டத்தில் பயன்பெற பின்வரும் தகுதி உள்ள பயனாளிகள் விண்ணப்பிக்கலாம் .

ஒவ்வொரு பயனாளிக்கும் 250 எண்ணிக்கையிலான 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையிலிருந்து இலவசமாக வழங்கப்படும் .கோழி கொட்டகை சொந்த செலவில் அமைக்க குறைந்த பட்சம் 625 சதுரஅடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும். இடத்தின் சிட்டா / அடங்கல் நகல் இணைக்கப்பட வேண்டும் . இந்த பகுதி மனித குடியிருப்பிலிருந்து விலகி இருக்க வேண்டும் . கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். 2022-23 ஆம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டத்தின் கீழ் பயனாளியாக அவரோ அல்லது அவர்தம் குடும்பத்தினரோ பயனடைந்திருத்தல் கூடாது. பயனாளி 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரிக்க உறுதி அளிக்க வேண்டும்.

பயனாளியின் பங்குத் தொகையை, வங்கி கடனாகவோ அல்லது சொந்த முதலீடாகவோ அளிக்க வேண்டும். 50 சதவீதம் தொகை அளிப்பதற்கான ஆதார ஆவணங்கள் (வங்கி இருப்பு / வங்கி கடன் ஒப்புதல் விபரம் இணைக்கப்பட வேண்டும்) விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 சதவீதம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகள் தேர்ந்தெடுக்கப்படுவர். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள், திட்டம் தொடர்பாக, தங்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்டம் தொடர்பாக மேலும் விரிவான விபரங்களை தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பங்களை கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் பெற்று பூர்த்தி செய்து, ஆதார் அட்டை நகல், நில ஆவண நகல்களுடன் 10.07.2024 -க்குள் கால்நடை உதவி மருத்துவரிடமே சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News