தமிழ் ஆட்சிமொழி சட்ட விழிப்புணர்வு பேரணி.
நாகர்கோவிலில் தமிழ் ஆட்சிமொழி சட்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Update: 2023-12-28 07:33 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் 18-12-2023 தொடங்கி ஒருவார காலம் நடைபெற்று வருகிறது. ஆறாம் நாளான நேற்று ஆட்சிமொழி விழிப்புணர்வுப் பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி கடைவீதி வழியாக நாகர்கோவில் மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில் நிறைவடைந்தது. விழிப்புணர்வு பேரணியில் நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தென்திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி, மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி , ஸ்காட் கல்லூரி மாணவ மாணவிகள் மொத்தம் 250 பேர் பங்கேற்று ஆட்சிமொழி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச் சென்றனர். பேரணியிணை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்தார். தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் செ.கனகலட்சுமி, நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ப.ஆனந்தநாயகி, கல்லூரி மாணவ மாணவியர்கள், பேராசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.