ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்கம்!

நாமக்கல்லில் சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2024-07-05 12:55 GMT

நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், பாச்சல், ஏ.கே.சமுத்திரம், ஞானமணி பொறியியல் கல்லூரியில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் முன்னிலையில் சாலை பாதுகாப்பு மன்றம் சார்பில் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்களுக்கான பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கில் மாவட்ட ஆட்சியர் உமா கலந்து கொண்டு பேசுகையில்.... மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்திடும் வகையில் மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்தினார்கள்.

எதிர்பாராத வகையில் சாலைகளில் ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்பட்ட நபர்களின் இன்னுயிரை பாதுகாத்திடும் விதமாக "இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48" திட்டத்தை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு, சாலை விபத்துக்களை குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுத்தல் ஆகியவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில், சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைத்திடும் நோக்கில் தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்ட உன்னத திட்டமே இன்னுயிர் காப்போம் திட்டம். இத்திட்டத்தின் முக்கிய அங்கமாக, சாலை விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும்.

சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வை குறிப்பாக இளைய தலைமுறையினரான மாணவர்களிடம் கொண்டு செல்வதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் சாலை பாதுகாப்பு மன்றங்கள் தொடங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் விபத்துகளை தடுப்பதற்கும், விபத்தினால் மரணங்கள் ஏற்படுவதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சாலை விபத்துகளை குறைத்திட சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதித்தல் உள்ளிட்ட பணிகளையும் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் புதிய முன்னெடுப்பாக சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திட சாலை பாதுகாப்பு பூங்கா (Road Safety Park) விரைவில் தொடங்கப்படவுள்ளது. ஆசிரியர்கள் மாணவர்களுடன் அதிக நேரம் செலவிட கூடியவர்கள். எனவே, மாணவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். மாணவர்களிடம் வழக்கமான நடைமுறைகளில் ஏதேனும் மாற்றம் கண்டறியப்படும் பட்சத்தில் உடனடியாக அந்த மாணவிடம் ஆசிரியர் கலந்துரையாட வேண்டும். அப்போது அதற்கான காரணத்தை கண்டறிந்து மாணவர்களை நல்வழிப்படுத்த முயற்சிக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்கள் நிறைந்த இந்த காலகட்டத்தில் மாணவ செல்வங்களை சமுதாய பொறுப்புணர்வுடன் நல்ல மாணவர்களாக உருவாக்குவது என்பது ஆசிரியர்களின் முக்கிய கடமையாகும்.

பள்ளி அளவில் உருவாக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு மன்றங்கள் மாணவர்களுடன் வாரத்திற்கு குறைந்த பட்சம் 1 மணி நேரம் சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். இதன்மூலம் மாணவர்களுக்கு போக்குவரத்து குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இப்பயிற்சி கருத்தரங்கில் வழங்கப்படும் கருத்துகளை மாணவர்களிடம் எடுத்துரைத்து விபத்தில்லா நாமக்கல் மாவட்டத்தை உருவாக்கிடும் வகையில் செயலாற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பேசினார். முன்னதாக, இக்கருத்தரங்கில் விழிப்புணர்வு பதாகைகளையும், கையேட்டினையும் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்.

மேலும், சாலை பாதுகாப்பு குறித்து நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, குறுவாசகம் ( ஸ்லோகன் )அமைத்தல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து, சாலை பாதுகாப்பு உறுதிமொழியை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், காவல்துறையினர் என அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மா.மரகதம் (தனியார் பள்ளிகள் (பொ) க.விஜயன் (இடைநிலை (பொ), முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெ.சந்திரசேகரன் (இடைநிலை) , வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இ.எஸ்.முருகேசன் நாமக்கல் (வடக்கு), ஏ.கே.முருகேசன் நாமக்கல் (தெற்கு), சு.சரவணன் (திருச்செங்கோடு), மா.பூங்குழலி (குமாரபாளையம்), ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன், சாலை பாதுகாப்பு பயிற்சியாளர் மதுரை எ.நரசிம்ம மணி உட்பட பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர், போக்குவரத்து துறையினர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News