ராமநாதபுரம் : வேளாண்மை பயிற்சி

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி வட்டாரம் களரி கிராமத்தில் வேளாண்மைத் துறையின் அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு கிராம வேளாண்மை முன்னேற்றக்குழு பயிற்சி நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குநர் அமர்லால் பயிற்சி அளித்தார்.

Update: 2023-12-16 16:16 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் விவசாயிகளுக்கு நெல் பயிர் உர நிர்வாகம், பூச்சி, நோய் நிர்வாகம் குறித்தும், தழைச்சத்து உரமான யூரியாவினை ஒரு ஏக்கருக்கு பரிந்துரைப்படி இட வேண்டும். ஒரு ஏக்கருக்கு ஒரு முறை 20 கிலோவிற்கு மேல் இடக்கூடாது எனவும் எடுத்துரைத்தார். உதவி வேளாண்மை அலுவலர் பழனிமுருகன், உதவி தொழில் நுட்ப மேலாளர் ஜோசப் ஆகியோர் நெல் வயலில் இலைச்சுருட்டு புழு தாக்குதல் செய்துள்ளதை விவசாயிகளுக்கு விளக்கமாக காண்பித்தனர்.

இலை சுருட்டு புழு நெல் இலைச்சுருட்டு புழு தாக்குதலை நிர்வாகம் செய்திட கீழ்க்கண்ட முறைகளை பயன்படுத்த விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. பூச்சியின் தாக்குதல் பொருளாதார சேதநிலையைத் தாண்டும் போது (வளர் பருவத்தில் 10 சதம் வரை இலை சேதம், பூக்கும் பருவத்தில் 5 சதம் வரை கண்ணாடி இலை சேதம்) ஏக்கருக்கு அசாடிராக்டின் 0.03% 400 மில்லி அல்லது கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50% எஸ். பி. 400 கிராம் அல்லது குளோர் ஆன்ரனிலிபுரோல் 18.5% எஸ். சி. 60 மில்லி ஆகிய பூச்சிமருந்துகளில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கவும். மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகுமாறு தெரிவித்தனர்.

நெல் நேரடி கொள்முதல் நிலையங்கள் மாவட்டம் முழுவதும் அமைக்கப்பட உள்ளது எனவும் ஒரு கிலோ ஏ கிரேடு நெல் ரூ 23.15 க்கு கொள்முதல் செய்யப்பட உள்ளது எனவும் விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தங்களது நெல் மணிகளை விற்பனை செய்திட வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்தார். உழவர் கடன் அட்டை பெற விரும்பும் விவசாயிகள் தங்களது புகைப்படம், ஆதார் அட்டை நகல், சமீபத்தில் பெறப்பட்ட பயிர் அடங்கல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.நெல் நோய் நிர்வாகம் நெல்லில் குலை நோய் வருவதை கட்டுப்படுத்த , ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாஸ் ப்ளரஸ்ஸன்ஸ மருந்தினை மக்கிய தொழு உரத்துடன் கலந்து வயலுக்கு இடவும், 50 சதவீத மானியத்தில் தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்ட்ச்சத்து இயக்கம் - அரிசி 23-24 திட்டத்தில் வேளாண்மை விரிவாக்க மையங்களில் வழங்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது. உழவன் செயலி பயிற்சிக்கு வந்திருந்த விவசாயிகளுக்கு ஆண்ட்ர்ய்டு கைபேசியில் உழவன் செயலி பதிவிறக்கம் செய்து அதனை பயன்படுத்திட அட்மா தொழில் நுட்ப மேலாளர் ஜோசப் எடுத்துரைத்தார். இப்பயிற்சியில் விவசாயிகள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News