கபிலர்மலை தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றம்.
கபிலர்மலை தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.;
பரமத்தி வேலூர்,.பிப்.3: பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர் மலையில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூசத் தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 4- ஆம் தேதி முதல் 9- ஆம் தேதி வரை காலை பல்லக்கு உற்சவமும், இரவு அன்ன வாகனம், ரிஷப வாகனம், மயில் வாகனம், யானை வாகனம், திருக்கல்யாணம், குதிரை வாகனங்களில் சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.வரும் 11- ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்கு மகர லக்கனத்தில் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும், மாலை 4.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழத்தலை தொடர்ந்து திருத்தேர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 12-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை காலை பல்லக்கு உற்சவமும், சத்தாபரணம், சிம்ம வாகனம், நடராஜர் தரிசனம், ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி புறப்பாடு, சுவாமி மலைக்கு எழுந்தருளல், விடையாற்றி உற்சவம் மற்றும் சர்ப்ப வாகன காட்சியும் நடைபெறுகிறது. கபிலர்மலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருத்தேர் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் திருவிழா குழுவினர் செய்து வருகின்றனர்.