தஞ்சாவூரில் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். தஞ்சையை அடுத்த நடுக்காவேரி மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (40); கூலி தொழிலாளி. இவர், மீது ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கி வைத்தல் போன்ற வழக்குகள் உள்ளன. திருச்சி மண்டல குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் சியாமளா தேவி பரிந்துரையின்பேரில் தஞ்சை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல் ஆய்வாளர் முருகானந்தம் வழக்கு ஆவணங்களை தஞ்சை ஆட்சியரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் பரிசீலனை செய்து மணிகண்டன் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, மணிகண்டனை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.