நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் திருவிழா துவக்கம்.
நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் திருவிழா கம்பம் நடும் விழாவுடன் துவங்கியது.;
பரமத்திவேலூர், மார்ச். 11: நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுார் அருகே பிரசித்தி பெற்ற நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தீ மிதி திருவிழா ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த வருடமும் நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் நடும் விழாவுடன் திருவிழா தொடங்கியது. 10-ஆம் தேதி காலை பக்தர்கள் காவிரியில் நீராடி கோவில் முன்பு நடப்பட்டுள்ள கம்பத்திற்கும், மாரியம்மனுக்கும் பால் மற்றும் தீர்த்தங்கள் ஊற்றி மஞ்சள் கயிறு அணிந்து விரதம் மேற்கொண்டனர். 10 ஆம் தேதி துவங்கி 22 ஆம் தேதிவரை தொடர்ந்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் , சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெறுகிறது.. 23 ஆம் தேதி மாலை வடிசோறு நிகழ்ச்சியும், அக்னிசட்டி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 24-ஆம் தேதி மதியம் ஆண்,பெண் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி ஊர்வலமாக கோவிலுக்கு வந்து கோவில் முன்பு அமைக்கப்படும் தமிழகத்திலேயே மிக நீளமானது என கூறப்படும் 62 அடி நீளமும்,6 அடி அகலமும் கொண்ட பூக்குண்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்தும், பூ வாரிப்போட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். 25 ஆம் தேதி கிடா வெட்டும் நிகழ்ச்சியும், பக்தர்கள் அலகு குத்தியும்,குழந்தை பாக்கியம் வேண்டியவர்கள் குழந்தை பிறந்த பின்பு கரும்பில் தொட்டில் கட்டி கோவிலை சுற்றி வந்து நேர்த்தி கடனை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறம். 26ஆம் தேதி அதிகாலை கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை நன்செய் இடையாறு மகா மாரியம்மன் கோவில் எட்டுப்பட்டி அறங்காவலர் குழுவினர், விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.